Friday, 24 July 2020

நன்றிகள்...



கிரகங்கள் நேர்க்கோட்டில் அமைய, வால் நட்சத்திரங்கள் வரிசையில் நிற்க எனது பிறந்த நாள் என்ற உன்னத நிகழ்வு நேற்று மீண்டும் நிகழ்ந்தது. காலையில் கண் விழித்தபோது "பையன் பொறந்திருக்கான்"னு யாரும் கத்தவில்லை. டாக்டர் என் காலை பிடித்து தலைகீழாய் தூக்கவில்லை. எந்த நர்ஸும் குளிப்பாட்ட வரவில்லை. அதனால் நானே குளிக்கச் சென்றேன்.
ரசிகர்களின் ஆரவாரம், கட் அவுட்கள், போஸ்டர்கள் ஏதுமில்லை. நான் பிறந்த வருடத்தில் பிராண்டன் லீ இறந்தார். ஒரு வயதானபோது நிக்சன் இறந்தார். இது தொடர, மத்தபடி மோசமான நிகழ்வுகள் ஏதுமில்லை.
பொதுவாக பிறந்தநாளில் நான் கேக் வெட்டுவதில்லை. எதற்காக கேக்கில் எச்சில் தெறிக்க மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு கேக்கை பிசைந்து அடுத்தவருக்கு தயிர் சாதமாய் தருவானேன். எதையாவது சாதித்த பின்னரே கேக்கை வெட்ட நினைப்பேன். இன்னும் காலம் இருக்கிறது. சிறுவயது தானே!
ஆனால் இப்பெல்லாம் கேக் எளிதாக கிடைத்து விடுகிறது. ஆனால் “இத்தனை மெழுகுவர்த்தி வேணும்னா ரெண்டு நாள் முன்னாடி சொல்லிடுங்க. பாக்டரில இருந்து வரவழைக்கணும்” என்று கடைக்காரர் கோபப்படுகிறார். எல்லா மெழுகுவர்த்திகளையும் கொளுத்தினால் கொரோனோவுக்கு விளக்கேத்தியது போல இந்தியா ஒளிருகிறது. ஊதி அணைக்காமல் பேன் போட்டு அணைக்க வேண்டியிருக்கிறது. அதற்குப்பின் வெளிப்படும் புகையில் ஏதோ வீடு தீப்பிடித்து விட்டதோ என்று பயந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி விடுகின்றனர்.
அதுவும் நேற்றைய பிறந்த நாளில் அண்ணாச்சி விளம்பரம் மாதிரி 'பக்கத்து வீட்டில கொரோனா இருக்கு. எதிர்த்த வீட்டில் இருக்கு. உங்க வீட்டில் இருக்கானு' அரசு கேட்டுட்டு முழு ஊரடங்கு செய்துவிட்டதால் அமைதியோ அமைதி.
நேற்றும் முதல் ஒரு மணி நேரம் பரபரப்பாய் போன்கள் தொடர, சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் போல சிங்க நடை போட்டேன். அதற்கப்புறம் 'துணிய இன்னும் காயப் போடலையானு' அசரீரி கேட்க புழக்கடைக்கு வந்தா எதிர்த்த வீட்டு பெரிய மீசைக்காரர் சேலையை நீவிநீவி காய வச்சிட்டிருந்தார். நான் அவரை வேடிக்கை பார்க்க, ஒரு ஆம்பளையோட மனசு ஆம்பளைக்கு புரிந்தது. அவரு அசடு வழிய அவரு போனதும் நான் காயப் போட்டேன்.
வயதில் ஒரு வருடம் கூடினால் நான் எப்போதும் வருத்தப்படுவதில்லை. அதை நண்பர்களின் வயதில் சேர்த்து விடுகிறேன். எனினும் நேரம் ஒதுக்கி முகநூலில் கவிதை எழுதியவர்களுக்கும், போஸ்ட் பதிவிட்டவர்களுக்கும், நிஜத்தை விட நிழலை அழகாய் பென்சிலில் வரைந்தருளிய இருவருக்கும், போன் செய்த கோடான கோடி அன்பர்களுக்கும் நன்றி கூறும் இதேவேளையில்,
சந்தடி சாக்கில் "அண்ணே" என்று வாழ்த்திட்டு அவர்களின் வயதை குறைத்துக் கொண்ட எதிர் கட்சிக்காரர்களுக்கு கண்டனத்தையும் பதிவிட்டு, இது திரும்ப வட்டியுடன் செலுத்தப்படும் என்று கூறிக்கொண்டு அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

கொரோனா திருவிளையாடல்..

கொரானா வைரஸுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் பல நாட்கள் வாய்தா வாங்கிய கொரோனா குழம்பிப் போய் நீதிமன்றத்திற்கு பதிலாக பட்டிமன்றத்தில் ஆஜராகி பராசக்தி டயலாக்கை சைனீசில் பேசியதன் தமிழ் டப்பிங்.
*****
நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை கண்டிருக்கிறது. புதுமையான வைரஸ்களை கண்டிருக்கிறது. ஆனால் இந்த வழக்கு விசித்திரமுமல்ல. வழக்காடும் நான் புதுமையான வைரசுமல்ல.
வாழ்க்கைப் பாதையில் சர்வ சாதாரணமாக தென்படும் ஒரு வைரஸ்தான் நான். மக்களை தாக்கினேன் உயிர்களை பறித்தேன் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று. நிச்சயமாக இல்லை.
மக்களை தாக்கினேன். மக்கள் வேண்டாம் என்றல்ல. மியூசிக்கலியில் மாமாக்களும் ஆண்டிகளும் போடும் குத்தாட்டத்தை தாங்கமுடியாமல்.
உயிர்களை பறித்தேன். இவர்களை தின்பதற்கு அல்ல. ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் இவர்கள் தின்னுத்தீர்க்கும் உயிர்களை காப்பாற்ற.
உனக்கேன் இவ்வளவு அக்கறை. உலகத்தில் யாருக்குமே இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்.
நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக. சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்துள்ளது. தீர்ப்பு எழுதும்முன் கேளுங்கள் என் கதையை.
சைனாவில் பிறந்தேன் நான். என் நாட்டில் தவளைகளும், பாம்புகளும் நெளிந்தன. ஒரு அறிவிலிருந்து ஆறறிவு வரை அத்தனையையும் சாப்பிட்டார்கள் அறிவில்லாமல். பக்கத்து வீட்டுக்கு போனால் பல்லியையும், எதுத்த வீட்டிற்கு போனால் எலியையும் ஸ்னாக்சாக கொண்டுச் சென்றார்கள். எல்லா நாடுகளுக்கும் ஓடினேன். வந்தாரை வாழவைக்கும் தமிழகத்திற்கும் ஓடிவந்தேன்.
கட்டிப்பிடித்து முத்தா கொடுக்கும் வெளிநாட்டினரையே தள்ளி நின்று கைகூப்பி வணங்க செய்தவன் நான். உலக போலீஸான அமெரிக்கனையே டாய்லெட் பேப்பருக்கு சண்டையிட்டு தண்ணீரில் கழுவச் செய்தவன் நான். ஆனால் இங்கு என்னை நிம்மதியாக வாழ விட்டார்களா கயவர்கள்.
கல்யாணி எல்லாம் கல்யாணி கலப்பட பீரை தூக்கிக்கொண்டு அலைந்தார்கள். அவர்களுக்கு ஊறுகாய் தந்திருக்க வேண்டும். கலப்படமில்லா நல்ல சரக்கை கொடுத்திருக்க வேண்டும். செய்தார்களா. பதினாலு நாட்கள் வீட்டில் இருந்திருந்தால் விலகியிருப்பேன். செய்தார்களா. மீன் வாங்க முண்டியடித்தார்கள். மட்டன் வாங்க கட்டிப் பிரண்டார்கள். தனித்திரு விழித்திரு என்று சொன்னால் 'திரு' வுக்குதான் அது. நாங்க திருமதி என்று வெளியே சுத்தினார்கள் கொண்டையர்கள்.
ஒடுங்கி போன மண்டையனை கொரோனா மண்டையன் என்றார்கள். கோமியத்தை குடித்து என்னை மூழ்கடிக்க பார்த்தார்கள். எனக்கு மஞ்சள் பூசி வேப்பிலை அடித்து பேய் ஓட்டினார்கள். இஞ்சி டீ குடித்துவிட்டு குரங்காக சிரித்தார்கள். சப்பாத்தியிலிருந்து கேக் வரை என் உருவத்தை நகையாடினார்கள். அம்மை போட்ட மூஞ்சி போல் என் படத்தை அசிங்கமாக வரைந்தார்கள். கொரோனா என்ற அழகான பெயரை குரானா, சொர்ணா, குருமா பர்மா என்று கேவலப் படுத்தினார்கள். பிறந்த குழந்தைக்கு கொரோனா குமார் என்று பெயர் வைத்தார்கள். ஓடினேன் ஓடினேன். வாழ்வின் எல்லைக்கே ஓடினேன். ஒலியும், ஒளியும் காட்டி என்னை திரும்ப வரவழைத்தனர்.
அரசு சொன்னதைக் கேட்காதது யார் குற்றம்? லுங்கியை போட்டுவிட்டு கேரம் போர்டுடன் ஓடியது யார் குற்றம்? பைக்கில் ட்ரிபிள்ஸில் உலகை வலம் வருவது யார் குற்றம்?
சிகப்பு, ஆரஞ்சு, பச்சை பெயிண்ட் அடித்த மண்டையர்களின் நாட்டுக்கு பெயின்ட் அடித்தேன். நாய்க் கறண்டியதுபோல் அரைமண்டையை சேவ் செய்துவிட்டு தாடையில் சடை போட்டு திரிந்தவர்களின் மண்டையில் முடிவளர்த்தேன். உன்மூஞ்சில பீச்சாங்கையை வைக்க என்று பிரித்து பேசியவர்களின் சோத்தாங்கையையும் மூஞ்சியில் வைக்க முடியாமல் செய்தேன்.
ஹெல்மெட் போட்டு பந்தா பண்ணிய ஆண்களின் தலையில் துண்டு கட்டி வெளக்குமாறை தூக்கச் செய்தேன். மிக்ஸி, கிரைண்டரை பயன்படுத்தாமல் பெட்மாஸ் லைட் போல் மாறிய பெண்களை குத்துவிளக்காக மாற்றினேன். படிப்பு, படிப்பு என்று குமுறிய மாணவர்களை பத்து மணிவரை குப்புறடிச்சி தூங்கச் செய்தேன். ஆண்களின் போலி முகத்தையும், பெண்களின் உண்மை முகத்தையும் உலகிற்கு காட்டினேன். வெயிலில் அலைந்து கருகியிருந்த கருவாயன்களை வெள்ளையாக்கினேன். கிச்சன்களில் கீழடியில் தோன்றிய உப்புமாவைத் தவிர மற்ற உணவுகளையும் மீட்டெடுத்தேன். உலகில் அவசியமேது, அலங்காரமெது என்று புரிய வைத்தேன்.
நிலவில் ஆயா வடை சுடுவதை தெளிவாக தெரியுமளவு பூமியை மாசிலிருந்து காத்தேன். டாக்டர்கள், தூய்மை பணியாளர்கள், போலீஸ்காரர்கள் இந்த மூவரும் வராமல் இருந்திருந்தால் உலகத்தை மாற்றியிருப்பேன். மனிதர்களை மைனாரிட்டி ஆக்கியிருப்பேன். அன்பை கடவுளாக்கி, மனிதத்தை மதமாக்கி இருப்பேன்.
மனிதன் மாறாதவரை கொரோனோக்களும், கர்மாக்களும் திரும்ப வரும். இதுதான் எங்கள் வாழ்க்கையேட்டின் தத்துவம், பாடம்.
கொரோனா நல்லதா கெட்டதா என்று கன்ப்யூஸ் ஆன நடுவர் துல்கர் சல்மான் பாப்பையா எதிர்கட்சிக்காரரான மொரட்டு தமிழரிடம் அவரின் வாதத்தை தாக்கல் செய்யச் சொன்னதாக கேள்வி.

Tuesday, 7 July 2020

கொரோனா லீவ்..

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் எனும் முத்துசாமி மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினார். பின்னர் கீழேயிறங்கி உடலைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம் (அசோக்) கண் விழித்துக்கொள்ள...
இம்முறை முந்திக்கொண்ட விக்கிரமாதித்தன் வேதாளத்திடம் கேள்வி கேட்டார் "உலக நாடுகளை கொரானா தாக்கி எல்லோருக்கும் இரண்டு மாதம் லீவு கொடுத்துள்ளது. இப்படி லீவு கிடைக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால் தமிழ்நாடு எப்படி இருந்திருக்கும். அதைப் பற்றி சொல்?" என்று கேட்க
வேதாளம் தலையை சொரிந்து கொண்டு "மன்னா இது ஒரு dry subject. என்னத்த சொல்ல"
"யோசி. தொங்கிட்டு தூங்கிட்டே தானே இருக்க"
வேதாளம் பறந்து சென்று மரத்தில் தொங்கியடி பேசத் தொடங்கியது.
"கேள் மன்னா! மது பிரியர்கள் இரண்டு மாதத்திற்கு தேவையான சரக்குகளை வாங்கி வீட்டில் ஸ்டாக் வைத்துக்கொண்டு “சரக்கு வச்சிருக்கேன் எறக்கி வச்சிருக்கேன்” என பாடித் திரிவர்.
மாட்டிக்கொண்டு முழிக்கும் பத்தாவது, 12வது மாணவர்கள் “அந்த மிச்சம் இருக்கிற பரிட்சையை சீக்கிரம் வைங்க” என்று கேட்டு எழுதி விட்டு நிம்மதியாக இருப்பார்கள். பரிட்சை எழுதாமல் பாஸான ஆடாம ஜெயிச்சோமடா புள்ளிங்கோ நாலு மாதம் முன்னாடியே படிப்பதை நிறுத்தியிருப்பார்கள்.
சலூன் பிரச்சனைக்காக ஆண்கள் அனைவரும் கோவிந்தா கோவிந்தா என மொட்டை போட்டுக்கொண்டு தமிழ் தேசம் மொட்டையர்களின் தேசமாக மாறியிருக்கும். மொட்டை மூளைக்கு நல்லது என்று ஒரு கும்பலும், அரசு மக்களுக்கு மொட்டை போட்டு விட்டது என்று எதிர்க்கட்சிகளும் பிரசாரிப்பர்.
பெண்கள் எலுமிச்சை சாத பவுடர், புளிசாத பவுடர், உப்புமா பவுடர், கேசரி பவுடர் என வாங்கி குவித்திருப்பர். சில பெண்கள் இரண்டு மாதம் டைவர்ஸ் வாங்கி கொண்டு ஓடிப்போயிருப்பர்.
புது மருமகன்கள் அனைவரும் மாமியார் வீட்டுக்கு சென்று தங்கிக் கொண்டு குந்தித் தின்று குன்றை கரைத்து வயிற்றை தள்ளிக்கொண்டு அலைவர்.
ஐடி நிறுவனங்கள் தாலி போன்று ஒரு வஸ்துவை கண்டுபிடித்து எம்பிளாய்ஸ் கழுத்தில் கட்டி "எப்ப சாப்பிடுறான், எப்ப வேலை செய்றான்” என்று கண்காணிப்பர்.
அரசு வழக்கம் போல டாஸ்மாக் உண்டு இல்லை. ஆன்லைன் கிளாஸ் உண்டு இல்லை னு வெள்ளாடிட்டு இருக்கும்.
கொரோனா நுழையாமல் அமெரிக்காவை சுற்றிப் டிரம்ப் சுவர் எழுப்பி இருப்பார்.
சீன ஊடகங்கள் வழக்கம் போல கொரோனா பத்தி பேசுன டாக்டரை காணோம். லேபை காணோம்னு தேடிட்டு இருக்கும்.
"சரி இந்த பதிவுக்கு எப்படி பின்னூட்டங்கள் வரும். அதையும் சொல்" என்று விக்கிரமாதித்தன் கேட்க வேதாளம் தயங்கியது.
"பரவாயில்லை சொல் நம்ம புள்ளிங்கோ தான். கோவிக்க மாட்டார்கள்".
“போன பதிவிற்கு பின்னூட்டங்கள் இட்டவர்களின் அதே வரிசையில்”
P Muthu Swamy அருமை
Srikanth Jayaraman அசோக் அண்ணே பக்கத்துல தொங்குற பெண் வேதாளம் யாரு ?
Selvaprakash Nattudurai வேதாளத்தை
வென்ற
விக்கிரமாதித்தனே
விந்தையை விதைத்த
வித்தகனே
வெளுத்துட்டீங்க....
Suja Sujatha பிரமாதம் ப்பா
Neela Alangudy இதேபோன்று நண்பர் கந்தசாமி பத்தாவது படிக்கும் நண்பர்களுக்காக வேதாள வித்துவான் என்ற புத்தகம் எழுதி கருத்துக்களை தொங்க விட்டிருக்கிறார். ரொம்ப நேரம் தலைகீழா தொங்காதீங்க. மூளை சரியாயிடும். அப்படியும் ஆகலைன்னா நாளைக்கு நான் ஒரு போட்டோ போடுறேன்.
Thiruppathi Vasagan அட்டகாசம் நண்பரே. பிரமாதமாக வந்திருக்கிறது. 😁😁😁💐💐💐💐💯💯💯💯💯
Shanthirajasheker Shanthi Life is like that. Men have to hang in front of wives
Lasyaa சூப்பர் பாஸ்.
அம்மைநாதன் சித அண்ணா கலக்கல்..
Anuradha Prasanna எப்போதும் மரத்துல ஏறி இந்த அசோக வேதாளத்தை வெட்றதுக்கு மரத்தையே வெட்டித் தள்ளியிருந்தா வேதாளத்தை வாக்கிங்கிலயே கூட்டிட்டு போயிருக்கலாம்.
TK Vidhya Kannan இப்படி லீவு கிடைக்குமென முன்பே தெரிந்திருந்தால் கொஞ்சம் தயாராக இருந்திருக்க முடியும். சரி எந்த இடத்துல தொங்கிட்டு இதையெல்லாம் யோசிச்சீங்க..
Joseph Alex நம்மளும் தொங்குறோம்.. படிச்சிட்டு.
Padma Sundaram ஆபீஷ்ல உப்புமா பவுடரெல்லாமா கிடைக்குது ? ஆபீஸ் எங்கேயிருக்கு..
Kalai Kalaiselvi சூப்பர் சகோ. எங்கியோ போயி தொலஞ்சி போயிட்டீங்க.
Anandhi Jeeva தபூ சங்கரை கொன்னுட்டு வேதாளமாயிட்டீங்களா. இந்தா வர்றேன்.
💐💐💐💐💐💐💐

டிவி சூழ் உலகு.....

டிவி சூழ் உலகு.....

டிவி எனப்படும் அகில உலக இடியட் பாக்ஸ் மற்ற நாடுகளில் பொழுதுபோக்கிற்கு பயன்படுகிறன. ஆனால் இந்தியாவில் மட்டும் மக்களை இடியட்டாக்கி, வீடுகளின் நடுவில் அமர்ந்து கொண்டு பஞ்சாயத்து பண்ணிக் கொண்டுள்ளன. விடியும்போதே 'மகர ராசி நேயர்களே' என்ற கரகர குரலை கேட்காவிட்டால் பலருக்கு மனச்சிக்கல் ஆரம்பித்து மலச்சிக்கலில் முடிகிறது. இதனால்தான் சிலர் வீட்டில் பாத்ரூம் இல்லாவிட்டாலும் டிவி இருக்கிறது.
சட்டி போல பெட்டியாக ஆரம்பித்த டிவிக்கள் இப்போது காலத்திற்கேட்ப ஸ்லிம்மாகி சுவரில் பல்லி போல ஒட்டிக்கொண்டுள்ளன. கொரோனோ தாக்குதலுக்கு பின்னர் வீட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் இரண்டாவது பொருளாக டிவி மாறியிருக்கிறது. முதல் பொருள் ஒலிம்பிக் ஜோதி போல அணையாமல் எரியும் கிச்சன் ஸ்டவ்.
நியூஸ்களை தவறிப்போய் பார்த்தால் உலக அளவில் வெறுக்கப்படும் இரண்டாவது விஷயமாக கொரோனா இருக்கிறது. முதலிடத்தில் யார் என்பது நீங்கள் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பதை பொறுத்து மாறலாம். ஆனால் முதலிடத்தில் மருமகளுக்கு மாமியார் என்பதும் மாமியாருக்கு மருமகள் என்பதும் சமாதி மேல் அடித்து செய்யக்கூடிய சத்தியமான உண்மை.
நண்பர்களின் வீட்டிற்குச் சென்றால் உளமாற உள்ளே அழைத்து உபசரித்தது ஒரு காலம். இப்போதெல்லாம் டீவியில் ஓவர் மேக்கப் பெண்மணி கதறிக் கொண்டிருக்க குடும்பமே ஹாலில் அமர்ந்து கண்ணை துடைத்துக் கொள்கிறார்கள். நம்மை உள்ளே அழைத்து உட்கார வைத்துவிட்டு கமர்சியல் பிரேக்கில் மட்டுமே பேசுகிறார்கள். “வாப்பா சோனையா நல்லா இருக்கியா”.
உறவுகளை கொச்சை படுத்தாமல், அடுத்த குடும்பத்தை கெடுக்காமலிருக்கும் டிவி சீரியல்கள் டிராயர் போடாத ஆண்கள் போல அரிதாகி விட்டன. பெரும்பாலும் அனைத்து டிவி சீரியல்களிலும் பெண்களே வில்லிகளாக இருப்பதன் காரணத்தை பெண்கள்தான் சொல்லவேண்டும். கன்னித்தீவு போல சில சீரியல்கள் இவருக்கு பதில் அவர், அவருக்கு பதில் எவர் என்று மாற்றிக்கொண்டு தொடர்கின்றன. கதாநாயகியின் 10 மாத கர்ப்பம் டிவி சீரியலில் 30 மாதத்திற்கு ஓடுகிறது, யானையின் பேறுகாலமே 22 மாதங்கள்.
விளம்பரங்களுக்கு நடுவில் காட்டப்படும் சில நிமிட மெகா சீரியல் வில்லிகளின் முகத்திலிருக்கும் ஒரு இன்ச் பவுடரும், அவர்கள் மூஞ்சியை சுத்தி சுத்திக் காட்டுவதும் கொரோனோ வைரஸை விட கொடுமையாய் இருக்கின்றன. கொரோனோவால் கிடைத்த ஒரே நன்மை இந்த டிவி சீரியல்களை நிப்பாட்டியதே. பல வீடுகளில் மணியடித்தால் சோறு கிடைப்பதாய் கணவர்கள் சொல்கிறார்கள்.
வயதானவர்கள் நியூஸ் சேனலை விடுவதேயில்லை. அருகில் அமர்ந்து கொண்டு மாற்றி மாற்றி நியூஸ் சேனலை பார்க்கிறார்கள். தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல.
தமிழில் பேசும்போதே "ராமன்ம ரத்தைப்பி டுங்கினானே" என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன் பேசும் டிவி ஆங்கர்ஸ் கையை நீட்டி கண்ணை குத்தாத தூரத்தில் பாதுகாப்பாய் அமர்ந்து கொண்டு டிவி பார்ப்பது நல்லது.
டிவியின் பயன்பாடு மெதுவாக குறையக் காரணம் டிவி குஞ்சு பொரித்தது போலிருக்கும் மொபைல் போன்களே. அனைத்து செய்திகளும் வாட்ஸ் அப்பில் சுடசுட வர, டிவி எதற்கு என்ற கேள்வி எழுந்தது. பிரபஞ்சம் அழிந்தாலும் லைவாக வாட்ஸ் அப்பில் தெரிந்து விடும் நிலை. இப்பவோ அப்பவோ என்று இழுத்துக் கொண்டு கிடந்த டிவியின் உயிரை காப்பாற்றியதில் சீரியல்களுக்கு பங்குண்டு. அதுவும் குறைந்து போனிலேயே டிவி சீரியல்களை நம்ம அப்ரசெண்டுகள் பார்க்க ஆரம்பித்த காலத்தில் கோடைமழை போல வந்த கொரோனா மீண்டும் டிவிக்கு புத்துயிர் தந்துள்ளது.
'வா வா வாத்யாரே வா வஞ்சிக்கொடி' என்ற சத்தான பாடல்கள் பக்கத்துக்கு வீட்டு டிவியில் கேட்கத் தொடங்கியுள்ளன.
இதிலிருந்து டிவியின் வாழ்வதனை போன் கவ்வும். டிவி மறுபடி வெல்லும் என்பது தெரிகிறது..

Tuesday, 21 April 2020

முகநூலுக்கான கோடாரி விதிகள்...


முகநூலில் கண்விழித்து, வாய்கொப்பளித்து, டீ ஆத்துபவரா நீங்கள். உங்களுக்காக சில...
முகநூலில் பக்கம் என்பது ஒருவருடைய உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் குழுமியிருக்கும் இடம். சுருக்கமாக அவர் வீட்டு ஹாலைப் போன்றது.

உங்கள் ஹாலில் நீங்கள் எதை வேண்டுமென்றாலும் போட்டுக் கொண்டு திரியுங்கள். பெர்முடாசோ அல்லது சட்டை போடாமல் உடல் முழுவதும் புசுபுசுவென்ற முடியுடனோ. ஆனால் அடுத்தவர் ஹாலுக்குள் பதிவிட போகும்போது முழுக்கை, டை, ஷூவுடன் செல்வது ஆகச் சிறந்தது.

நேரில் பார்த்தால் எவ்வளவு இடைவெளியுடன் உரையாடுகிறோமோ அதையே முகநூலிலும் கையாளுங்கள். மற்றவர்கள் பேசுகிறார்கள் என்பதற்காக 'ஹாய் மச்சான்' என ஆரம்பித்து அவரை மனைவியுடன் மாட்டி விட்டு கும்மி அடிக்காதீர்கள்.

மற்றவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு காமெடி செய்கிறேன், கருத்தை விதைக்கிறேன் என நினைத்துக் கொண்டு எல்லை தாண்டாதீர்கள். கோடு கோடாத்தான் இருக்கணும்.
தங்கக் கோடாரி விதி : எதிர்மறை கருத்துக்கள் ஒருபோதும் வேண்டாம். அவர் ஹாலில் அவர் பஜ்ஜி நல்லா இருக்குன்னு சொன்னா உடனே நீங்கள் உள்ளே ஓடி வாயுப் பிரச்சினை வரும் என்று கதற வேண்டாம். அவர் வயிறு. அவருடைய கருத்து. உங்களுடைய அறிவை அங்கே காட்டவேண்டிய அவசியமில்லை. பஜ்ஜியை ரசிக்கும் நான்கு வாயு பகவான்கள் அவருக்கு கமெண்ட் போட்டு அருளுவர்.

அடுத்தவர் எழுதியதில் குறை காண்பது எளிது. வேண்டுமெனில் நீங்களும் தினமும் யோசித்து கருத்து யானப் பாலை வழங்குங்கள். யான, யானப் பால்.

வெள்ளிக் கோடாரி விதி : அறிவுரைகள் வேண்டவே வேண்டாம். உங்கள் பதி/ பத்தினியுடன் எல்லாவற்றிலும் ஒத்த கருத்துக்கள் உங்களுக்கு இருக்கிறதா? இல்லை அல்லவா. உங்களுக்கு 'தாயைக் காத்த தனயன்' படம் பிடிக்குமெனில் அவங்களுக்கு 'தலையணை மந்திரம்' பிடிக்கும் (vice versa). அப்படி ஓருயிர், ஈறுடலுக்குள்ளேயே வித்தியாசங்கள் இருக்கும்போது, நீங்கள் அவர் பக்கத்தில் நுழைந்து உலகிலேயே சிறந்த படம் 'சின்ன வீடு' என்று பதிவிடாதீர்கள்.
அனைத்து கருத்துகளுக்கும் எதிர் கருத்து உண்டு. உலகில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் கருத்து என்று உங்களிடம் உள்ளதா? உலகின் மிகச்சிறந்த உணவு சிக்கன் பிரியாணி என்ற உண்மையைக் கூட ஏற்றுக் கொள்ளாத உலகமிது. ஐஸ் நீரில் மிதக்கும் என்று சொன்னால் கூட 'இத சொல்ல வந்துட்டியா' னு கருத்திடுபவர்கள் உண்டு.
பிளாட்டினக் கோடாரி விதி : முகநூலில் அறிவுரை மூலம் எவரையும் திருத்த முடியாது. சமூக பக்கங்கள் அனைத்தும் டைம் பாசுக்கு என்பதை புரிந்து கொள்ளுங்கள். மதம், சாதி, கட்சி, தெய்வம் என்று முழங்குபவர்களிடம் கம்பு சுற்றாதீர்கள்.
அடுத்தவரை டேக் செய்து எல்லோர் தட்டிலும் இட்லி பரிமாறுவதை விடுங்கள். அவருக்கு தேவையானதை அவர் எடுத்துக் கொள்வார். சொர்ணா வைரசை ஒழிக்க அரசு தன்னார்வலர் குழுவிற்கு உங்கள் பெயரையும் நான் கொடுத்தால் ஒத்துக் கொள்வீர்களா?

முகநூலில் நுழையும்போதே ஆல் இன் ஆல் அழகுராஜாவாக கையில் கிளௌஸ் மாட்டிக்கொண்டு நுழையாதீர்கள். ஒருவரின் கருத்து பிடிக்கவில்லையா? Unfriend ஆப்சனை பேஸ்புக் பகவான் மார்க் ஆன்டனி அருளியிருக்கிறார். அதை விடுத்து மற்றவர்களை தூய்மையாக்கப் போகிறேன் என்று ஞான உபதேசம் செய்ய கிளம்பாதீர்கள். உங்கள் கருத்து அக்மார்க் முத்திரை இடப்பட்ட சரியான கருத்தாக இல்லாமலும் இருக்கலாம்.

பதிவுகளைப் பார்க்காமல் மொய் வைத்து மொய் வாங்கும் உலகம் பேஸ்புக். கண்ணுக்கு கண், பல்லுக்கு பல காட்பாதர்கள் புழங்குமிடம். எனவே லைக் வேண்டுமெனில் லைக் போடுங்கள். கமெண்ட் வேண்டுமெனில் கமெண்ட் போட்டு மகிழ்ந்திருங்கள்.
ஆனால் எதிர் மறையோ, அறிவுரையோ வேண்டாம்.

இதை யாரும் கடைப் பிடிக்க மாட்டீர்கள் என்று தெரிந்தாலும், இவை எனக்கு தோன்றிய மூன்று கோடாரிகள். பிளாட்டினக் கோடாரியல்ல. மார்க் ஆன்டனியல்ல, ஈறுடல் அல்ல என்று தொடங்குபவர்கள் தங்கக் கோடாரியை கையில் எடுக்கவும்.

Monday, 17 February 2020

என் இசைப்பயணம்... 🎵

 என் இசைப்பயணம்... 🎵

எதையும் முன்கூட்டியே பிளான் பண்ணி செய்யும் முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாகிய நான், நிறைய ஆராய்ச்சிகளுக்குப் பிறகு சேலத்திலிருந்து சென்னை வருவதற்கு KPN பஸ் சேவையை தேர்ந்தெடுத்து பஸ் டிக்கெட்டை ஒரு வாரம் முன்னரே பதிவு செய்திருந்தேன். செமி ஸ்லீப்பர், வோல்வோ ஏசி பஸ் மற்றும் ஜன்னல் இருக்கை. இரவு பயணத்திற்கு வேறென்ன வேண்டும்.

இரவு 11.00 மணிக்கு பஸ்ஸிலேறி சீட்டில் அமர்ந்த சிறிது நேரத்தில் எனது பக்கத்து இருக்கையில் மெல்லிய ஆசாமி ஒருவர் வந்தமர்ந்தார். எலும்பானவரை பார்த்ததும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாகி விட்டது. பொதுவாக இரண்டு பேர் அமரும் இருக்கைக்கு நடுவிலிருக்கும் கை வைக்கும் கட்டைக்கு ஒரு பனிப்போர் நடக்கும். இனி ஆர்ம் ரெஸ்ட் என்னுடையதென நன்றாக ஜிம் பாடி மாதிரி நெஞ்சை விரித்து அமர்ந்துகொண்டேன். வண்டி மெதுவாக கிளம்பியது.

சற்றுநேரம் பயணித்து விட்டு சற்று கண்ணயர்ந்தேன். திடீரென்று ஒரு கிறீச்சிடும் ஒலி கேட்க, பஸ் ஆக்சிடன்ட் ஆகி விட்டதென்று பயந்து கண்களை விழித்தேன். அனைத்தும் ஒருகணம் அமைதியாய் இருக்க, மீண்டும் அந்த கர்ஜனை ஒலி எனக்கு அருகிலிருந்த அரை ஜாண் உடலிலிருந்து எழுந்தது. இவ்வளவு மெல்லிய தேகத்தில் எப்படி இவ்வளவு கர்ண கடூரமான குறட்டை ஒலியென்று அதிர்ந்து போனேன். எனக்கு வந்த கடுப்புக்கு ஓங்கி மூஞ்சிலேயே ஒரு குத்து விடலாமென தோன்றியது.

இத்தனூண்டு மூக்கை வச்சிக்கிட்டு எப்படி நாதஸ்வரம் ஊதுகிறார் என்று அதிச்சியுடன் நான் பார்க்க மீண்டும் அவர் ஒரு முறை ஊதினார். இதுவரைக்கும் நீண்ட மூக்கையுடைய யானைகள்தான் இப்படி பிளிறி பார்த்திருக்கிறேன். எப்படி இந்த பிரச்னையை சமாளிப்பதென நான் யோசித்திருக்க மற்றவர்கள் அனைவரும் எதுவும் நடக்காதது போல் உறங்கிக் கொண்டிருந்தனர். மீண்டுமொரு முறை அவர் துருப்பிடித்த டிராயரைத் திறந்து, மூடுவது போல ஒலியெழுப்பினார். நான் பஸ்ஸின் குலுக்கலில் குலுங்குவது போல அவரை வேண்டுமென்றே ஒருமுறை இடிக்க, குறட்டை நின்றது.

சற்று நிம்மதியாகி கண்களை மூடிக்கொண்டு தூங்க முயன்றேன். மீண்டும் சிறிது நேரத்தில் கப்பல் கிளம்பும் சைரன் ஒலி கேட்க, இந்த தடவை செம டென்சன் ஆனேன். அவர் விதவிதமாய் உறுமிக்கொண்டிருக்க,
பஸ்ஸின் மேலிருந்த பையை அவர்மேல் தள்ளிவிடலாமா என்று யோசித்தேன்.
அதற்கு பதிலாக நான் அவரை எழுப்பி "என்னங்க இவ்வளவு சத்தமா குறட்டை விடுறீங்க" என்று சொல்ல,
அவர் வெட்கத்துடன் "சாரி. என் மனைவியும் இதைத்தான் சொல்வாள்" என்றார்.
"எப்ப திருமணம் செஞ்சீங்க?"
"ஒரு மாதமாகுது"
'அனேகமா சீக்கிரம் ஓடிப்போய்டுவாள் அல்லது விவாகரத்து கேட்பாள்' என்று நினைத்துக்கொண்டேன்.
நான் அவரிடம் "அவங்க எப்படி சமாளிக்கிறாங்க?"
"அவள் வேற ரூமில் படுத்துக்குறா"
‘நானா இருந்தா பிளாட்பார்மில் படுத்தாலும் படுப்பேன். இந்தாளோட படுக்கமாட்டென’ என நினைத்தேன்.
மனிதர்கள் குறட்டை விட்டு பார்த்திருக்கேன். ஆனால் இது வேற லெவல். நகங்களால் சுவரை சொறியறது மாதிரி இல்லாட்டி கான்கிரீட் தரையில் எஃகு அலமாரியை இழுப்பது போல.
மீண்டும் தூங்க முயன்றோம். உண்மையில் நான் முயற்சித்தேன், அவர் தூங்கினார். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, மீண்டும் அவர் ட்ரெயின் ஹாரனை அலறவிட, நான் திரும்பி அவரது வாயைப் பார்த்தேன். சப்மரைன் மாதிரி காற்றை இழுத்தவர், காற்றை வெளியேற்றியபோது அவரின் உதடுகள் நடுங்கின. மூன்று முறை கர்ஜித்தார், நாலாவது முறை உறுமினார். அவரின் இசைப் பிரவாகம் வழிந்தோட, பஸ்ஸில் அனைவரும் அமைதியாக உறங்கினர். ‘காது கேட்காதவர்கள்’ பஸ்ஸில் இருக்கிறானா என்று சந்தேகம் வந்தது.
திடீரேன முன்னிருக்கையில் இருந்தவர் வேறொரு சுதியில் குறட்டை விடத்தொடங்க, எனது இரவுப் பயணம் சிவராத்திரி ஆகி விட்டது புரிந்தது. என் காதை சுற்றி டர்பன் மாதிரி துணி கட்டி சர்தாராகிப் பார்த்தேன். பயனில்லை. தலை, மூஞ்சு, முகரையெல்லாம் எகிப்த் மம்மி மாதிரி துணி சுற்றி பார்த்தேன். வேஸ்ட். காதில் பஞ்சு வைத்து பார்த்தேன். பேசாம அவரோட மூக்கில் பஞ்சு வைச்சு பார்க்கலாமா என்று ஐடியா வந்தது. மறுபடியும் அவரை ஒருமுறை இடித்தேன். குறட்டை சிறிது நேரம் நின்றது. பின்னர் மீண்டும் அவர் புதிய உத்வேகத்துடன் குறட்டை விட தொடங்கினார்.
போனை எடுத்து "குறட்டை விடும் நபரிடமிருந்து தப்பி உயிர் வாழ்வது எப்படி?" என கூகிளில் தேடினேன்.
அது "குறட்டை விடும் கணவனிடமிருந்து தப்பி பிழைப்பது எப்படினு காட்ட, என் கணவரை(!) செகண்ட் பார்த்துக்கிட்டேன். என்னவா இருந்தா என்ன.
கூகிள் தந்த ஐடியாக்கள்..
(i) அவரை அசைக்கவும் - நான் பேசாம அவரை பஸ்ஸிலிருந்து அசைத்துத் தள்ளிடலாமான்னு பார்த்தேன்.
(ii) மூக்கில் கிளிப் போடவும் - நான் அவரின் கழுத்தில் கயிறு போட்டு இறுக்கலாமான்னு நினைத்தேன்.
(iii) அவரது தலையின் கீழ் பெரிய தலையணையைப் பயன்படுத்துங்கள் - நான் அவரோட மூஞ்சிமேல் தலையணையை வச்சி அழுத்தி பிடிக்க விரும்பினேன். குறட்டை நிற்கும்வரை அழுத்திப் பிடிக்கனும்.
(iv) அவரை சூடான குளியல் போட சொல்லுங்கள், அவரை புரிந்து கொள்ளுங்கள், படுக்கையை மாற்றுங்கள், தலையணையை மாற்றுங்கள் இப்படி பல வழிகளை கூகிள் சொல்லியது.
எனக்கென்னமோ கணவரை மாற்றுவது தான் சிறந்த வழின்னு தோணியது.
அதற்குள் மேலும் இரண்டு பயணிகள் வெவ்வேறு சுதி, சுருதியில் தொடங்க பஸ்ஸில் ஆர்கெஸ்ட்ரா தொடங்கியது. ஒரு பெண்ணும் அவர் பங்குக்கு குறட்டை விடத் தொடங்கினார். 33%னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டார்னு நினைக்கிறேன். ஒவ்வொருவரும் வெவ்வேறு ஒலியை எழுப்பினர். உலகத்திலிருக்கும் எல்லாருக்கும் கைரேகை மாதிரி குறட்டை ஒலியும் வெவ்வேறு போல. ஒருவர் மேலேறியபோது மற்றொருவர் கீழிறங்கினார். எனக்கு விலங்குகளுக்கு மத்தியில் மிருகக்காட்சிசாலையில் தூங்குவது போல் இருந்தது. என் பின்னாலிருந்த குண்டு மனிதர் காற்றை இழுத்து சத்தத்துடன் ஊதியபோது எனது தலைமுடி பறந்தது. பஸ்ஸின் எல்லா இடங்களிலுமிருந்தும் ஒலியும், ஒலியும் கேட்கத் தொடங்க, குறட்டையர்களுக்கான பஸ்ஸில் டிக்கெட் புக் பண்ணிட்டனானு எனக்கு சந்தேகம் வந்தது. ஒருவர் அரிசி போட்டு வாயிலேயே மாவு அரைத்தார். ஒருவர் விமானத்தை தரையிறங்கிக் கொண்டிருந்தார். ஒருத்தர் ரம்பத்துக்கு சாணை பிடித்துக்கொண்டிருந்தார். பஸ் குலுங்கினால் அனைவரும் நல்ல பிள்ளையாகி விட்டு, சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கச்சேரியை தொடங்கினர்.
நான் எழுந்து பஸ் டிரைவரிடம் சென்று "ஐயா இந்த கிளீனர் மாதிரி ஏதாவது வேலை செய்றதுனாக்கூட பரவாயில்ல. இங்கயே உட்காரட்டுமான்னு" கேட்க, அவர் பரிதாபப்பட்டு அவரின் உதவியாளருடன் உட்கார அனுமதித்தார்.
"எப்படிங்க இந்த சத்தத்தில தூங்குறது?" னு நான் கேட்க,
"இது பரவாயில்ல. போனவாரம் ஒரு ஆளு போட்ட கொரட்டைல நான் பஸ்டயர் வெடிச்சிடுச்சினு கீலெல்லாம் இறங்கி செக் பண்ணினேன்" என்றார்.
இந்த நாடும், நாட்டில் குறட்டை விடுபவர்களுக்கு நல்லா இருக்கட்டும் என நினைத்துக்கொண்டு நிம்மதியாக சாஞ்சி உட்கார்ந்துக்கிட்டேன்.
பஸ்ஸுக்குள் ஜுராசிக் பார்க்கிலிருந்து தப்பிய அனைத்து விலங்குகளும் ஒன்றையொன்று சாப்பிட முயன்று கொண்டிருக்க நான் அமைதியாகி மெதுவாக கண்களை மூடினேன்.

எனக்கு அருகிலிருந்த உதவியாளர் குறட்டை விடத் தொடங்கினார்.

T for Tea/Training..



எங்க ஆபீஸ்ல எந்த ஒரு ட்ரைனிங்க்கு ஒருவரை தேர்ந்தெடுத்தால் அதற்கான பட்டியலை A for Ashok னு தொடங்குவாங்க. ஒருமுறை ITC Grand Chola ட்ரைனிங்கில் என்னையும் சேத்திருந்தார்கள். இந்த வயதில் அசையாம ஒரு இடத்துல உட்கார சொல்வதென்னமோ ‘சல்மான் கானிடம் சட்டைய கழட்டாம நடின்னு’ சொல்ற மாதிரி.
நான் மறுபடி ஸ்கூலுக்கு போற மாதிரி ரெடி ஆனேன். தலைமுடிக்கு 100 மில்லி தேங்காய் எண்ணெய், முகத்தில் 50 கிராம் பவுடர், நெற்றியில் ஒரு பொட்டு. அப்படியே நெற்றியில் ஒரு சுருளுடன் எனது பள்ளிக்கு சாரி ஹோட்டலுக்கு போனேன். அதென்னமோ அந்த வாட்ச்மேன் என்னை உள்ளே விடுறதுக்கு முன்னாடி என் ஐடி கார்டையும் என்னையும் அத்தனை தடவ பார்த்தாரு. கண்ணு தெரியலை போல. நான் பழக்கதோஷத்தில் போயி கடைசி பெஞ்சில் உட்கார்ந்துக்கிட்டேன்.
அது இந்திய மற்றும் வெளிநாட்டு அரசின் ஜாயிண்ட் ட்ரைனிங் கோர்ஸ். பாடம் நடத்த வந்தவங்கெல்லாம் 7 அடிக்கு குறையாம இருந்தாங்க. குட் மார்னிங் சா..ர் னு சொல்றதையே மைக்ல சொன்னாதான் அவங்களுக்கு கேட்கும்னா பார்த்துக்குங்க. டீசண்டா போகணும்னு மூஞ்ச நல்லா ஷேவிங் பண்ணிட்டு போனா, அங்க வந்த எல்லா வெளிநாட்டு வாளும் தாடியோட திரியிறாங்க. சும்மா ஒவ்வொருவருக்கும் சில்வெஸ்டர் ஸ்டேலன் இல்லாட்டி அர்னால்டு மாதிரி உடம்பு. ஒருத்தர பிரிச்சா 2 அசோக்கு பண்ணலாம். ஸ்டைலா அவங்க பேசுனப்பெல்லாம் நான் இங்கிலிஷ் படம் பாக்கிற பழக்கதோஷத்தில தமிழுல எழுத்து போடுவாங்களோன்னு வயித்த பார்த்துக்கிட்டு இருந்தேன். நல்ல வேலையா லேடி டீச்சர் யாருமில்லை.
சும்மா ட்ரைனிங்கெல்லாம் பக்காவா பிளான் பண்ணியிருந்தாங்க. மதிய சாப்பாட்டுக்கு முன்னாடி ஒரு டீ பிரேக். பின்னாடி ஒரு டீ பிரேக். சோழ நாடுன்னாலே சோறுடைத்து. அதனால என் மனசெல்லாம் மதிய சாப்பாட்டையே நினைத்திருக்க, எனக்கும் மதிய சாப்பாட்டிற்கு நடூல ரெண்டு வாத்தியார் இருந்தாங்க. கோர்ஸிலேயே சிறந்த விஷயம் என்னான்னா எல்லா நேரமும் டீயும், பிஸ்கட்டும் ரெடியா இருந்துச்சி. ஏதாவது டவுட்டுன்னா கேள்வி கேளுங்கன்னு சொன்னாங்க. நமக்கு தெரியலைன்னு ஏன் காட்டிக்கணும்னு நான் கடைசி வரைக்கும் கேள்வியே கேட்கலை. வெளி நாட்டிலருந்து வந்த புள்ளிங்கோ வேற. மரியாதை தரணுமில்ல.
ஒவ்வொரு டேபிளிலும் வாட்டர் பாட்டில், கிளாஸ், 10 சாக்லேட் வச்சிருந்தாங்க. எல்லா பக்கத்துலருந்தும் கத்துக்கணும்னு நான் மூன்று முறை இருக்கையை மாற்றிக்கிட்டேன். அடுத்த நாள் சாக்லேட் வைக்கலை. மதிய சாப்பாட்டுக்கு பின் எனக்கு கேட்டதெல்லாம் தாலாட்டு மட்டும் தான். அமெரிக்க தாலாட்டு.

சொல்ல மறந்துட்டனே. இவ்வளவு சாப்பாட்டுக்கும் இடையில் பாடமும் நடத்துனாங்க.